தனியார் ஊடக நிறுவனம் தாக்குதல்- அதிமுக கண்டனம்..!

சத்யம் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய செயலை அதிமுக சார்பில் கண்டனம்.

நேற்று மாலை 6.45 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த  மர்ம நபர் ஒருவர் திடீரென தனது பேக்கில் இருந்து பட்டாக் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றை எடுத்து அலுவலக கண்ணாடிகளை உடைத்ததோடு அங்கிருந்த தொலைக்காட்சி ஊழியர்களை மிரட்டியுள்ளார். குஜராத் மாநில பதிவெண் கொண்ட வாகனத்தில் அந்த நபர் வந்துள்ளார்.

ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தது வருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பல்வேறு காட்சி ஊடகங்கள் செய்திச் சேனல்கள் இயங்கி வருகின்றன. மதம் சார்புடைய காட்சி ஊடகங்களும், மக்கள் பத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஊடகங்களில் ஒன்றான “சத்யம் தொலைக்காட்சி” நிலையத்தை தனிநபர் ஒருவர் நேற்று (3.8.2021), கையில் ஆயுதங்களோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இச்செயலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதுபோன்ற தாக்குதலைத் தடுக்க தற்போதைய திமுக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தொலைக்காட்சி நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்புலத்தை ஆராய்ந்து, இனியும் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan