பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது- அமைச்சர் வேலுமணி

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-யில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று 37 மணி நேர தொடர் மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி  நேற்று உரையாற்றினார்.கோவையில் இருந்து கலந்துகொண்டு உள்ள தமிழக மாணவிக்கு தமிழில் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் தொடங்கினார்.

அதில், மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” இறுதிப் போட்டியில் பங்கேற்று, மக்களுக்கு பயனளிக்கும் தொழில் நுட்பம் பற்றிய திறனை வெளிப்படுத்திய கோவை மாணவர்கள் ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோரை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சிறு வயது முதலே மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம் காட்டி தங்களின் திறனை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.