பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் தொடங்கியது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்று வழக்குகளுக்கு மத்தியில், கொரோனா தொடர்பான நிலைமை மற்றும் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் தொங்கியது.
இந்த கூட்டத்தில், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது. 5 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 220,65,21,180 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,673 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.