பதவி வெறி.. காட்டுமிராண்டித்தனம், பொதுக்குழுவும் செல்லாது.. இதுவும் செல்லாது – வைத்திலிங்கம்

பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை, கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என வைத்திலிங்கம் பேட்டி.

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, அவர்களது ஆதரவாளர்களுடன் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார். அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.

இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பின் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இருப்பதை துளியும் கண்டுகொள்ளலாம், அவருடன் எதைப்பற்றியும் கலந்து ஆலோசிக்காமல் இபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக பொதுக்குழு வரலாற்றில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கனவே, பொதுக்கு கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில்,  பொதுக்குழுவில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அவைத்தலைவர் அறிவித்தார்.

இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும்போது ஓ.பி.எஸ் பெயரை குறிப்பிடவில்லை என்பது, ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோன்று செயல்கள் அருகேறி வரும் நிலையில், நாகரிகமான முறையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைதி காத்து வந்தனர். ஒரு கட்டத்தில், சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட பாதியிலேயே துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளியேற, அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

அதிமுக பொதுக்குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாகவும், ஓ.பி.எஸ் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதாலும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைத்திலிங்கம், தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாததாகிவிட்டது. 23 தீர்மானங்களை ரத்து செய்து, நீதிமன்றத்தின் ஆணையை அவமதித்துள்ளனர். இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றம் உத்தரவு மீறப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்போம். பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டுள்ளனர்.

பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை, கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள். பதவி வெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல, அரை மணிநேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம். இப்போது இருப்பதை போல் கூட்டு தலைமைக்கு ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கும், சமாதானத்துக்கும் தயார் என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்ததும் செல்லாது என்றும் அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் கிடையாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும். அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வரக்கூடிய சூழல் கண்டிப்பாக உள்ளது என தெரிவித்தார். பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஏற்பட்டுள்ள சர்ச்சை, பிரச்சனை, சலசப்புக்கு மத்தியில் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment