கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக கூறி, அவர் மீதும் அவரது மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், வழக்கில் போதிய ஆதாரம் இல்லை, குற்றசாட்டுகள் நிரூபணம் செய்யவில்லை என கூறி வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். ஆனால், வேலூர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை..
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, அதை விசாரணைக்கு எடுத்தார். கடந்த 10ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி வெங்கடேஷ் கூறியதாவது, சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது.
இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம். தாமாக எடுத்த வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி ஆணையிட்டார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக செப்.7-ஆம் தேதி (இன்று) பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. லஞ்சஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுத்தாய் செய்ததை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணை நடத்த உள்ளார்.