பொள்ளாச்சி பாலியல் கொடூரம் – சிபிஐ விசாரணைக்கு அனுமதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஹெரன்பால் என்பவருக்கு 2 நாள் சிபிஐ காவல் விதித்து  கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து,  கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு  கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவலுக்கு அனுமதி அளித்தது கோவை மகளிர் நீதிமன்றம் .சிபிஐ 5 நாள் காவல் கேட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.