7 ஆண்டுகள் நிறைவடைந்த ஜன்தன் திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு..!

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில்,இதற்காக உழைத்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜன்தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். அதன்பின்னர்,இந்தத் திட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.

பிரதமரின் இந்த ஜன்தன் யோஜனா திட்டம் என்பது,வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு மற்றும் மக்களுக்கு நிதி சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதற்கான திட்டமாகும். இதில், வங்கி சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள், பணம் எடுப்பது, கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய நிதி சேவைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.மேலும்,இந்த திட்டத்தின் மூலம்,ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் முப்பதாயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

குறைந்த செலவில் நிதி சேவைகள் மற்றும் நிதி திட்டங்களை கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதும், குறைந்த செலவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் அதனை பெரும்பாலான மக்களுக்கு விரிவுபடுத்துவது ஆகிய இதன் அடிப்படை கொள்கைகளாகும்.

இந்நிலையில்,பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு இன்றோடு வெற்றிகரமாக 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதன் மூலம் 43.04 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கும், ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகையும் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதில்,55% ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள் மற்றும் 67% ஜன்தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளன.

மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:”இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை என்றென்றும் மாற்றியமைத்த பிரதமரின் ஜன்தன் திட்டத்தின்(PMJanDhan) ஏழு ஆண்டுகள் நிறைவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இது நிதி சேர்க்கை மற்றும் கண்ணியமான வாழ்க்கை மற்றும் எண்ணற்ற இந்தியர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்துள்ளது. ஜன் தன் யோஜனா மேலும் வெளிப்படைத்தன்மைக்கு உதவியது.

பிரதமரின் ஜன்தன் திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவரின் அயராத முயற்சியை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்களின் முயற்சிகள் இந்திய மக்கள் ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளன”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் ஜன்தன் திட்டத்தின் 7 ஆண்டு நிறைவையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.