விமானம் மோதி விபத்து.. விமானி உட்பட 7 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் சிறிய ரக விமானம் மோதி விபத்துகுள்ளானதில், விமானிகள் உட்பட 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நாட்டில் காவல் துறையினருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம், கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. அப்பொழுது கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்டோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அவர்கள், வான் மற்றும் அண்டை மாகாணமான ஹக்கரி மீது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் விமானம் ரேடாரில் இருந்து மறைந்த தாகவும் அவர் தெரிவித்தார்.

அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 3 மணியளவில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் . அந்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் உட்பட அனைவரும் தேசிய காவல் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சோய்லு தெரிவித்துள்ளார்.