சற்று நேரத்தில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை., தீர்வு கிடைக்குமா விவசாயிகளுக்கு.?

இன்று மீண்டும் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதிய மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் குறைந்த பட்ச ஆதார விலையை சட்டரீதியாக உறுதிபடுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு 5 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்விலேயே முடிவடைந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

பின்னர் ஆறாம் கட்டமாக கடந்த 9-ஆம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, விவசாய சங்கங்களின் சார்பில் சம்யுக்த் கிஷான் மோர்சா என்ற அமைப்பு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை குறித்தும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை ஆவது விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்