“இனி இதுபோன்று நடந்தால் நிரந்தர பணி நீக்கம்” – போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை!

“இனி இதுபோன்று நடந்தால் நிரந்தர பணி நீக்கம்” – போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை!

விழுப்புரம் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து,இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

நேற்று விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற அரசு பேருந்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஓட்டுநராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் மாணவிக்கு, நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து,ஊருக்கு சென்ற அம்மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளிக்க,நடத்துனர் மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன், உடந்தையாக இருந்ததாக ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,இனி வரும் காலங்களில் பணியாளர்கள் இதுப்போன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்றும்,அவ்வாறு ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு போக்குவரத்துத் துறை விழுப்புரம் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு மாபெரும் தலை குனிவையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவும்,இது போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube