பேரறிவாளன் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர். மறுபக்கம் ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பின. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்புவதாக கூறினார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் தற்போது பேரறிவாளன் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளனர்.