திரைப்படத்துறைக்கும் அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பெப்சி தலைவர்..!

திரைப்படத்துறைக்கும் அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பெப்சி தலைவர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தற்போது சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெப்சி நிறுவனத்தின் தலைவரான ஆர்கே செல்வமணி திரைப்பத்துறைகளுக்கும் தளர்வளிக்க கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தற்போது ஊரடங்கு சட்டம் போட்டு ஏறக்குறைய 50நாட்களை தொட இருக்கிறோம். இதுவரை நன்கொடையாக வழங்கப்பட்ட உணவு பொருட்களை வைத்து இந்த 50நாள் வேலை முடக்கத்தில் பசிப்பினியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றி உள்ளதாகவும், இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பினியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலைகளில் உள்ளாதாகவும் கூறியுள்ளார். எனவே தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போல் திரைப்படத்துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதாவது படப்பிடிப்பு அல்லாமல்   ரெக்கார்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் போன்ற பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம்  தொழிலாளர்கள் சிலருக்கு வேலை கிடைக்கும். அதனால் பசி பட்டினியில்லாமல் அவர்கள் வாழமுடியும் என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசு ஏற்று அனுமதி அளிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.