பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு..!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை இவருக்கு மேளதாள வரவேற்பு கொடுத்துள்ளனர். பின்னர், இவரை மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பிற அரசியல் தலைவர்களும் மாரியப்பன் தங்கவேலுவை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து ஊர் மக்கள் தோளில் சுமந்து மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் கொண்டு சேர்த்தனர். மேலும், இவர் இந்த வாகனம் மூலமாக 7 கி.மீ. தொலைவு உள்ள அவரது கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். வழி எங்கிலும், மலர் தூவி மேளதாளங்களோடு இவரை வரவேற்று வருகின்றனர்.