அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக புகார் – சட்டப்படி நடவடிக்கை – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழகம் ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்மந்தப்பட்ட துறைகளில் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக, அப்போதை ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியல் அளித்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டியிருந்தார்.

2011ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதல், முதலமைச்சர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என பாகுபாடு இல்லாமல் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பாக கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் அள்ளுவது, பாலில் கலப்படம், முட்டை கொள்முதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஜிகே மணி தெரிவித்திருந்தார்.

மேலும், 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 200 பக்கங்களை கொண்ட ஊழல் பட்டியலை ஆளுநரிடம் பாமக வழங்கிய நிலையில், அதுகுறித்து தொடர் நினைவூட்டல்களை அனுப்பியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாமக புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து நீதிபதி பாமக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்