#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆக்கிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்சிஜன் உற்பத்திக்காக கடந்த 3 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. நாளையுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.

வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan