தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்து வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 24ம் தேதியுடன் இந்த முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மீண்டும் ஒரு வாரத்துக்கு  ஊரடங்கை நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த முழு ஊரடங்கின் பொழுது தளர்வுகள் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 14 நாட்கள் போடப்பட்டிருந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடிய கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை முதல்  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால், அத்தியாவசிய கடைகள், மளிகை கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும்.

தளர்வுகளற்ற ஒரு வார ஊரடங்கை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை இன்று இரவு 9 மணிக்குள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
Rebekal