ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மும்மரம் காட்டி வரும் நிலையில், மறுபக்கம் எதிர்க்கட்சிகள் கடும் வருகிறது. இதற்கான மசோதாவை வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது.
அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதன்பின், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரியும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கும். இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக இன்று முதலாவது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் அடங்கிய குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட குழு இன்று முதலாவது ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.