தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம் – சீன அதிபர் ஜீ ஜின்பிங்

தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன்,  அதனை உலகின் பொது சொத்தாக்குவோம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, இன்று லட்சக்கணக்கான மக்களை தாக்கி உள்ளது. இந்த வைரஸானது முதலில் சீனாவின் வுஹாண் மாகாணத்தில் தான் உருவானது. இந்த வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிற நிலையில்,  சீனாவின் உணவு பழக்கமும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்றும், இந்த வைரஸானது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த குற்றங்களை நிரூபிக்கும் வண்ணம் அதிகார பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், அமெரிக்கா இந்த விஷயத்தில் சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக தற்போது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான். 

இந்த கொரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை, 4,891,330 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 320,134 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், காணொலி காட்சி மூலம், உலக சுகாதார சபை கூட்டத்தில் பேசிய ஜீ ஜின்பிங் கொரோனா பிரச்சனையானது முற்றிலுமாக முடிந்த பிறகு, அது தொடர்பாக உலகளாவிய விரிவான மதிப்பீட்டிற்கு, சீனா முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் கூறுகையில், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அந்த தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன்,  அதனை உலகின் பொது சொத்தாக்குவோம் என்றும், இதன் மூலம் வளரும் நாடுகளில் எளிமையாகவும், மலிவாகவும் கிடைப்பதற்கான சீனாவின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.