இதுக்குமேல் சசிகலா ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் – சிவி சண்முகம்

இதுக்குமேல் சசிகலா ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் – சிவி சண்முகம்

சசிகலா வழக்கு நடத்த வேண்டுமானால், ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் நடத்த முடியும் – அமைச்சர் சிவி சண்முகம்.

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம். அதிமுகவில் சசிகலா உறுப்பினர் கூட கிடையாது. கொடியை பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக கொடியை தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மதுசூதன் தலைமையில் முதலில் வழக்கு ஒன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளரார் மற்றும் துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரனையும் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையமே, ஆணையரை நியமித்து, அதிமுகவின் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கட்சியின் நலன் கருதி, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் இயக்கத்தை ஒன்றிணைத்து தேர்தல் ஆணையத்தையும், வழக்கையும் சந்தித்தோம். அப்போது, சசிகலாவும், தினகரனும் நாங்கள் தான் அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர்கள் என்று வழக்கை நடத்தினார்கள். ஆனால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவை தலைவர் மதுசூதன் தலைமையில் இருப்பவர்கள் தான் அதிமுக, அவர்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று இறுதியான தீர்ப்பை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா, தினகரன் இருவரும் வழக்கு தாக்கல் செய்தனர். அதில், தேர்தல் ஆணையத்தில் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று கூறி அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது. பின்னர் இதனை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தினகரன், எனக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் உரிமை கோரப்போவது இல்லை எனவும் கூறி வழக்கில் ஒரு மனுவை தாக்கல் செய்து, அதிலிருந்து விடுவித்துக்கொண்டு, தனியாக கட்சியும் ஆராம்பித்துவிட்டார்.

அந்த வழக்கை தொடர்ந்து நடத்தியவர் சசிகலா. நான் தான் உண்மையான அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவை தலைவர் மதுசூதன் தலைமையில் இருப்பவர்கள் தான் அதிமுக. தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லும் என்றும் சசிகலா அதிமுகவை உரிமை கோருவது, எந்த உரிமையும் இல்லை என்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு அடுத்து சசிகலா, உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ரிவியூ பெட்டிஷன் தாக்கல் செய்தார். அதையும், தள்ளுபடி செய்தது. இதுதான் இந்தியாவிலேயே கடைசி தீர்ப்பு. இதுக்குமேல க்யூரிட்டி பெட்டிஷன் தான் போட வேண்டும். அதை சசிகலா தாக்கல் செய்யவில்லை. அதைத்தவிர வாய்ப்பு இல்லை. இதற்கும் மேல் சசிகலா வழக்கு நடத்த வேண்டும் என்றால், ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் நடத்த முடியும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube