பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பட்டியல் இனத்தை சேர்ந்த சிலர் கோவிலுக்கு உள்ள சென்றதாகவும் அவர்களை சிலர் உள்ளே அனுமதிக்காமல் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து பட்டியல் இன மக்கள் போராட்டம் , சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குப்பதிவின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மேல்பாதி கிராம பட்டியல் இன மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று இரு தரப்பு மக்களையும் முன் வைத்து இந்த பிரச்சனையை பற்றி பேசி சுமூக முடிவு எடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பழனி.
இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு மக்களும் வெவ்வேறு தேதிகளில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் செல்ல சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பு மக்களும் எந்த தேதிகளில் கோவிலுக்குள் செல்ல உள்ளார்கள் என்பது குறித்து பேசி முடிவு எடுப்பார்கள், அதனை அடுத்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.