திமுக சொத்துப்பட்டியல் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என முதல்வர் சார்பில் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுக சொத்துப்பட்டியல் (DMK Files) என்ற ஓர் வீடியோ பதிவை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில், திமுக எம்பிக்கள், திமுக அமைச்சர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள் என குறிப்பிட்டு தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சொத்துப்பட்டியல் குறித்து எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை தரப்பும் பதில் நோட்டீஸ் அனுப்பினர்.
தற்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அரசு சார்பில் வழக்கு தொடர்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்துறை அனுமதியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரபட்டுள்ளது. அதில், திமுக சொத்துப்பட்டியல் என அண்ணாமலை வெளியிட்ட தகவலில் உண்மையில்லை. அதில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளன. இந்த உண்மைக்கு புறம்பான தகவல்கள் காரணமாக முதல்வர் பதவிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் மாதம் விசாரணை நடத்தப்படும் என சென்னை முதன்மை நீதிமன்றம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.