ஒலிம்பிக் வில்வித்தை – காலிறுதியில் தீபிகா குமாரி போராடி தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியின்,காலிறுதி சுற்றில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியுற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்:

இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை பெரோவா திறமையை வெளிப்படுத்தினார்.இருப்பினும், முதல் செட்டை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா முன்னிலை வகித்தார்.

விறுவிறுப்பான போட்டி:

பின்னர்,இரண்டாவது செட்டை 26-27 என்ற புள்ளி கணக்கில் ரஷ்யாவின் பெரோவா கைப்பற்றினார்.ஆனால்,மூன்றாவது செட்டை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது செட்டில் 26-26 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.

இதனால்,வெற்றியை கடைபிடிக்க சூட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்,பெரோவா 7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். ஆனால்,தீபிகா 10 புள்ளிகள் பெற்றார்.இதனால் 6-5 என்ற கணக்கில் பெரோவாவை வீழ்த்தி, தீபிகா வெற்றி பெற்றார்.இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி :

இந்நிலையில்,காலிறுதி சுற்றில் தீபிகா குமாரி,தென் கொரியாவின் ஆன் சானை எதிர்கொண்டார்.

பின்னடைவு:

முதல் செட்டில் ஆன் சான் 30-27 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.இதனையடுத்து ,இரண்டாவது செட்டிலும்,தீபிகாவை வீழ்த்தி ஆன் 26-24 முன்னிலையில் இருந்தார்,கடைசியில் மூன்றாவது செட்டிலும் 26-24 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை முன்னிலை பெற்றார்.

வாய்ப்பை இழந்தார்:

இறுதியாக,தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் ஆன் சானிடம் தோல்வியுற்றார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் பதக்க வாய்ப்பை இழந்தார்.இருப்பினும்,ஒவ்வொரு  செட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புள்ளிகளை இழந்து போராடி தோல்வியடைந்துள்ளார்.