கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் :தன்னை விடுவிக்க கோரிய பேராயரின் மனு தள்ளுபடி.!

கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பஞ்சாபில் உள்ள ஜலந்தர் கிறிஸ்தவ மிஷனரியில் பேராயராக(பிஷப்) இருந்தவர் பிரான்கோ முலக்கல். அதே மிஷனரியை சேர்ந்த கேரளாவின் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக தன்னை பிரான்கோ 2014 முதல் 2016-ம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் துன்புறுத்தியதாக கூறி புகார் செய்திருந்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது பஞ்சாப் ஜலந்தரில் ஜாமீனில் உள்ள பிரான்கோவின் பாலியல் வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் பிரான்கோ, தன் மீது பொய் புகார் கன்னியாஸ்திரி அளித்துள்ளதாகவும், தன்னை விடுவிக்க கோரியும் பலமுறை மனு தாக்கல் செய்ய, கோட்டயம் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மேலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் கடந்த ஜூலை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த பிரான்கோவின் ஜாமீனை ரத்து செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் தன்னை விடுவிக்க கோரி மேல்முறையீடு செய்த பிரான்கோவின் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.