பாஜகவுக்கு எம்.பி பதவியை விட்டுக் கொடுத்த என்.ஆர். காங்கிரஸ்..?

மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் பாஜகவுக்கு மாநிலங்களவை இடத்தை என் ஆர் காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது  என தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே மாநிலங்களவை இடம் குறித்து இழுபறி நீடித்து வந்தது. நேற்று வரை பாஜகவிற்கு மாநிலங்களவை இடத்தை விட்டு தர மறுத்த முதல்வர் ரங்கசாமி திடீரென மாநிலங்களவை இடத்தை பாஜகவிற்கு விட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.

பாஜகவின் அழுத்தம் காரணமாக என்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை இடத்தை விட்டு கொடுத்துள்ளதாகவும், மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.செல்வகணபதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக உள்ள செல்வகணபதி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். செல்வகணபதியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாஜக டெல்லி மேலிடம் இன்றைக்குள் அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

குறைவான எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பாஜகவுக்கு எம்.பி பதவியை விட்டுக் கொடுத்ததால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சபாநாயகர், அமைச்சர் பதவி வழங்குவதிலும் பாஜகவின் நெருக்கடிக்கு ரங்கசாமி பணிந்து சென்றதாக தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரசுக்கு 10 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan