“யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது!”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இசைப்பள்ளி அமைக்கும் பணியின் தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், புதூர் ஊராட்சி நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மாணவர் விடுதி அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் திரையரங்குகளுக்கு தற்பொழுது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இருப்பதாக தெரிவித்தார்.

அப்பொழுது அவரிடம் செய்தியாளர் ஒருவர்
சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், அதிமுகவில் யாராலும், எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.