ஜூன் 3 முதல் 5 வரை  தடுப்பூசி போடப்படாது -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் !

ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என  சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6-ஆம் தேதிக்கு பிறகே தெரியும். இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 42.58 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியது.

இதுவரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது, கையில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் என தெரிவித்தார்.

author avatar
murugan