“எவ்வளவு தடங்கல் வந்தாலும் மீண்டும் வேல் யாத்திரை தொடரும்” – எல்.முருகன்!

எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதனையடுத்து பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி வேலயாத்திரையும் நடந்தது. வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் சென்னை – தியாகராயா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தமிழகத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரூம் எனவும் திட்டமிட்டபடி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என்றும், இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறிய அவர், கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா? என கேள்வியெழுப்பிய எல்.முருகன், சாலையில் செல்பவர்களையெல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமின்றி, முதல்வர் பழனிசாமி செல்லும் இடங்களில் கூட அதிகளவில் கூட்டம் கூடுகிறதாக குற்றம்சாட்டிய அவர், நாங்கள் கூடினால் வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது என தெரிவித்துள்ளார்.