எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது – டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று  டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
 மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது.அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.அவரது கோரிக்கையில், மாநிலங்களில் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது எனவும், தொழில் பயிற்சி அறிமுகம் சாதியப் படிநிலைகள் வலுப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை  நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சார்பாக T.R பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன்.மேலும் T.R பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.