நிபா வைரஸ் தாக்கம்: கேரளாவுக்கு விரைந்த மத்தியக்குழு..!

நிபா வைரஸ் தாக்கத்தால் தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்து வருகிறது. இருந்தபோதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் உள்ளது. அதன் காரணத்தால் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமான அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒரு சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இன்று காலை 5 மணியளவில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளான். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். சனிக்கிழமை இவனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவனது மாதிரிகள் புனே தேசிய கிருமியியல் மையத்திற்கு நேற்று முன் தினம் அனுப்பப்பட்டது.

இதில் இவனுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வைரஸ் தொற்றை கண்காணிக்கும்படி பல்வேறு தடுப்பு குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படவில்லை.

சிறுவனின் ரத்தம், எச்சில், மூளை தண்டுவட திரவம் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் தொற்று இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கவலைப்பட வேண்டாம். மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று வரவுள்ள மத்திய குழு கேரளாவிற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்யவுள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.