கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நேரு விலங்கியல் பூங்கா சிங்கங்கள் குணமடைந்துள்ளது!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு சிங்கங்கள் தற்போது குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும்கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முதல் அலையிலேயே நியூயார்க் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்ட சம்பவம் தெரியவந்தது. தற்பொழுது கொரோனா இரண்டாம் அலையில் வன விலங்குகள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் காய்ச்சல் போன்ற கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்பட்டது.

எனவே அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், 14 நாட்கள் கடந்த பின்பு மீண்டும் பரிசோதனை செய்ததில் தற்பொழுது இந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal