“தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா” – குடியரசு தலைவர் வாழ்த்து..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம், தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா என்று குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஆண்கள் ஈட்டி எறிதல் தடகள இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கத்தில் முதல் சுற்றில் 87.03 மீ தூரமும்,இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார்.

இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார்,இவர் இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று முடிவிலும் முன்னிலையில் இருந்தார் நீரஜ். இதை எந்த நாட்டு வீரரும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் கடைசி சுற்று முடிவிலும் நீரஜ் முன்னிலை வகித்தால் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்க பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியா தங்கம் வென்றுள்ளது.ஏனெனில்,2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார்.

இந்த நிலையில்,நீரஜ் தங்கம் வென்றதால் பதக்க பட்டியலில் 66 வது இடத்தில் இருந்த இந்தியா 46 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து,ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம், தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் நீரஜ் சோப்ரா என்று குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நீரஜ் சோப்ராவின் வரலாறு காணாத வெற்றி! உங்கள் ஈட்டி எறிதல் தங்கம்  தடைகளை உடைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.உங்கள் முதல் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் டிராக் அண்ட் ஃபீல்ட் பதக்கத்தை கொண்டு வந்தீர்கள். உங்கள் சாதனை நம் இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!”,என்று தெரிவித்துள்ளார்.