நேஷனல் ஹெரால்டு – சோனியா காந்தி,ராகுல் காந்தி நேரில் ஆஜர் – அமலாக்கத்துறை போட்ட உத்தரவு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது.

இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து,2010 ஆண்டு யங் இந்தியா நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே,இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பவன்குமார் பன்சால்,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தது.

இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி நேரில் ஆஜராக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment