கோவில் உண்டியலை உடைத்து நாகர்கோவிலில் திருட்டு – மர்ம நபரை தேடும் பணியில் போலீசார்!

நாகர்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வெட்காளியம்மன் எனும் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து கோவிலை திறந்த போது அங்கு முன் பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த கோயிலில் உண்டியல் திருடப்படுவது இதோடு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. திங்கள்கிழமை இரவு நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள நீலவேணி அம்மன் கோயிலிலும் இது போன்ற திருட்டு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
author avatar
Rebekal