கலாச்சார ஆய்வுக்குழு – குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்

கலாச்சார ஆய்வுக்குழு – குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்

இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை  உடனடியாக கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு  32 எம்பிக்கள்  கடிதம் எழுதியுள்ளனர்.

அண்மையில் மத்திய அரசு இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத 16 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.அவரது கடிதத்தில், இந்தியப் பண்பாட்டு ஆய்வுக் குழுவில் தமிழ்நாட்டுப் புலமையாளர்களையும் சேர்க்க மத்திய அமைச்சரை பிரதமர் வலியுறுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இதே மாதம் மாமல்லபுரம் பயணத்தில் தமிழ் பாரம்பரியத்தின் விழுமியத்தை உணர்ந்திருப்பீர்கள்.எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும் என்று  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். 12000ஆண்டுகள் பழமையான இந்திய கலாச்சார வரலாற்று ஆய்வு செய்யும் குழு தென்னிந்தியர்கள்  இல்லாத பாகுபாடு நிறைந்த குழுவாகஇருக்கிறது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube