திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது.!

  • கோவையில் அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 74 வட்டம் கலைஞர் நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக செயலாளர் எஸ்எம்.சாமி, வட்டக்கழக செயலாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ பேசுகையில், கோவை மாநகராட்சி முழுவது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேட்டின் பகுதியாக கோவை உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பல நோய்கள் பரவ கூடிய உள்ளது எனவும், மாநகராட்சியின் பணிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் எஸ்பி.அன்பரசின் தலையீடு இதில் உள்ளது, இதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநகராட்சியின் இதுபோன்ற செயல்களை கண்டித்து 11-3-20 அன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சியின் மெயின் அலுவலகத்தை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்