ஒடிசாவில் லஸ்ஸி வாங்கி குடித்த குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள சந்தை ஒன்றில் லஸ்ஸி வாங்கிக் குடித்த குழந்தை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள குர்தி எனும் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் வாராந்திர சந்தை ஒன்றில் வழக்கம் போல லஸ்ஸி விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லஸ்ஸி வாங்கி குடித்து விட்டு வீடு திரும்பிய குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூறு பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும் இவர்களது பாதிப்பிற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இதில் 60 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் 40 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்து அவர்களின் உடல்நிலை குறித்தும் பாதிப்பிற்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் பொது சுகாதார அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal