#Monkeypox: குரங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு!

குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார வலையமைப்பு (WHN).

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் (Monkeypox) என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று இன்னும் முழுவதும் ஒழியாமல் இருக்கு நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் வேகமாகா பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, தோல் அலர்ஜி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகள் என கூறப்படுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 58 நாடுகளில் பரவியுள்ள வைரசால் 3,417 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கு காய்ச்சலை ஒரு தொற்றுநோயாக அதாவது அவசர கால நிலையாக உலக சுகாதார வலையமைப்பு (World Health Network) அறிவித்துள்ளது.

WHN அறிவிப்பு, நேற்று நடைபெற்ற WHO கூட்டத்திற்கு முன்னதாக குரங்கு பாக்ஸ் ஒரு தொற்று நோயாக தீர்மானித்துள்ளது. ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை இல்லாமல் இந்த தொற்று பரவல் நிற்காது என கூறியுள்ளது. பெரியம்மை நோயை விட இறப்பு விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மில்லியன் கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள், மேலும் பலர் பார்வையற்றவர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் மாறுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பரவலான பாதிப்பைத் தடுக்க பல நாடுகளில் அல்லது உலகம் முழுவதிலும் ஒருங்கிணைந்த முயற்சியை அடைவதே குரங்கு பாக்ஸை ஒரு தொற்றுநோயாக அறிவிப்பதன் இன்றியமையாத நோக்கமாகும் என்று WHN கூறியது. குரங்கு நோய் தொற்று மேலும் வளரும் வரை காத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்போது செயல்பட சிறந்த நேரம். உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், குறைந்த முயற்சியில் பரவலை கட்டுப்படுத்தலாம். மேலும் விளைவுகளை மோசமாக்குவதைத் தடுக்கலாம் WHN இன் இணை நிறுவனருமான யானீர் பார்-யாம் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment