ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் …! தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு…!

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்வதாக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று சசிகலா கூறியிருந்தார்.

முன்னதாக,அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறிய சசிகலா தற்போது இவ்வாறு கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி,அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து,எம்.எல்.ஏ.கே.பி.முனுசாமி ,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,”சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.சசிகலா கட்சியிலேயே இல்லை.மேலும்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.எனினும்,அதிமுவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சசிகலா ஈடுபட்டு வருகிறார்.

ஆனால்,ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்கமாட்டார்.ஏனெனில், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் அதிமுக இயக்கத்தை காத்து வருகின்றனர்.எனவே,சசிகலா குடும்பத்தினர் அதிமுகவிலிருந்து விலகியிருந்தால்தான் அம்மா ஜெயலலிதா அவர்களின்  ஆன்மா சாந்தியடையும்”, என்று கூறினார்.