உலகமகா யோக்கிய சிகாமணிகளான ஸ்டாலினும், ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும் – டிடிவி எச்சரிக்கை

நாகரிக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். 

சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்றும் தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி. இதை மறைப்பதற்கு அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி என உச்ச நீதிமன்றம் தண்டித்த ஜெயலலிதாவின் படத்தை பார்த்தால் தலைகுனிய வேண்டும் என்றும் துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக ஊழல் கட்சியா – திமுக ஊழல் கட்சியா என்று என்னுடன் விவாதிக்க வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.

இதையடுத்து, இன்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆ.ராசா கேட்டதற்கு முதல்வர் பழனிசாமியை முதலில் பதில் தெரிவிக்க சொல்லுங்கள் என்று கூறிருந்தார். இது சர்ச்சையான வாக்குவாதமாக மாறியுள்ளது. ராசாவின் கருத்துக்கு அதிமுகவினரும் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக மகா யோக்கிய சிகாமணிகளான மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும் என்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேச ஊழலின் ஊற்றுக்கண்களான இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகரிக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை திரு.மு.க ஸ்டாலினும், திரு. ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். ஊழலில் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள், அவர்களை பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.

உலகிற்கே தெரியும் 2ஜி ஊழலில் பெரும் தலைகுனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்திய விஞ்ஞான ஊழல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக தமிழகத்திற்கு செய்த தீமைகள் கொஞ்ச நஞ்சமா? தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காவு கொடுத்தது இந்த கருணாநிதி கூட்டம்தானே? என்று தெரிவித்துள்ளார்.

தீயசக்தி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் ஆகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அதனால் ஸ்டாலினும், ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரீகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்