#IPL2021: மீண்டும் இந்த தவறை செய்தால் எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள்.. டெல்லி அணியை எச்சரித்த நடுவர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார். இதனால் டெல்லி அணிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேற, அவர்களையடுத்து களமிறங்கிய பண்ட் – ஹெட்மயர் கூட்டணி அதிரடியாக ஆடினார்கள். இறுதிவரை போராடிய டெல்லி அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சின்போது அமித் மிஸ்ரா, பந்துவீசும்முன் தெரியாமல் பந்தில் எச்சில் தடவினார்.

அதனை பார்த்த நடுவர் வீரேந்தர் சர்மா, டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் இதே தவறை செய்தால் எதிரணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்து வீச்சாளர்கள், பந்து வீசுவதற்கு முன், எச்சிலால் பந்தில் தடவி வீசுவது வழக்கம். தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளின் படி, பந்தில் எச்சில் தடவி பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.