மனைவியை இழந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன்.!தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்.!

அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உடனடியாக மணியன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , மாண்புமிகு அமைச்சர் திரு. ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி அவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகு‌ந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புக்குரிய தமது மனைவியை இழந்து வாடும் அமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.