மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு…அதிமுகவுக்கு பேரிழப்பு..!அமைச்சர்கள் -ஆளுநர் இரங்கல்

 அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

 

இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்

அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவை அறிந்து மிக வருத்தம் அடைந்தேன் என்று தேரிவித்துள்ளார்.

இதே போல் அமைச்சர் ஜெயக்குமார்  அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு, அதிமுகவுக்கு பேரிழப்பு மேலும் அமைச்சர் துரைகண்ணு ஒரு எளிமையான மனிதர், பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர் மற்றும் அவரது மறைவுக்கு அரசு விதிமுறைப்படி இரங்கல் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர், திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று கூறியுள்ளார்.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்று சொந்த ஊரான பாபநாசத்துக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.