ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் கன்யாரைச் சேர்ந்த பிஎஸ்ஐ அதிகாரி அர்ஷித் அஹமது புல்லட் காயமடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சியில் ஒரு தீவிரவாதி போலீஸ்காரரை பின்னால் இருந்து சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரரை மக்கள் சிலர் தூக்கி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.