மணமகன் இல்லாத திருமணம்…! 24 வயது பெண்ணின் அதிரடி முடிவு…!

குஜராத்தை சேர்ந்த 24 வயது பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். 

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த  நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது  திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் அழைத்துள்ளார். ஆனால் இந்த திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற உள்ளது. ஏனென்றால் இந்த திருமணத்தில் மணமகன் இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால் அப்பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் நான் மணமகளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். இதற்குப் பெயர் சோலோகேமி என அழைக்கப்படுகிறது. ஒரு வெப் சீரிஸில் நடிகை ஒருவர் எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என்று பேசியிருந்தார். இது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே என்னை நானே மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

இணையத்தில்  இதுபோன்ற திருமணத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று தேடலில் ஈடுபட்டேன். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை. திருமணத்தை புனிதமாக கருதும் இந்த இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் முதல் பெண் நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணின் திருமணத்தை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் ஜூன் 9ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும் ஜூன் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருமணமும் நடைபெற உள்ளது. திருமணத்துக்குப்பின் ஹனிமூனுக்காக கோவாவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment