குடமுழுக்கின்போது மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன்,பெ.மணியரசன்  உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு நிகழ்வை ஆகம விதிப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில்,  தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோயிலில் கருவறை உள்ளிட்ட எல்லா பகுதியிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று இந்து அறநிலைத்துறை தெரிவித்தது.இதனையடுத்து வருகின்ற 5-ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கை தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

இந்நிலையில் இன்று தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மணிகானந்தா என்பவர் பொதுநல வழக்கு  தாக்கல் செய்தார்.இந்த வழக்கினை நீதிபதி கார்த்திகேயன் தலைமை நீதிபதி அனுப்பிவைத்தார்.