திரைப்பட கலைஞர் மனோ பாலா மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
நடிகர் மனோபாலா (வயது 69) உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். மனோ பாலா மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மனோ பாலா மறைவிற்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் பதிவில், பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநரும், மாண்புமிகு அம்மா அவர்கள் முன்னிலையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டவருமான திரு.மனோபாலா அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்னாரின் குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார். இதுபோன்று, எடப்பாடி பழனிசாமி பதிவில், தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும், தலைமை கழக பேச்சாளரும் ஆன மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.