குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது!

தென்காசியில் குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் எனும் பகுதியில் காய்கறி சந்தையில் வேலை பார்த்து வரக்கூடியவர் தான் 37 வயதுடைய முருகேசன். இவர் தனது செல்போனில் ஆபாசமான குழந்தை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தேசிய காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டல் உட்படுத்தப்படும் குழந்தைகள் கண்காணிப்பு மையம் மூலம் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. பின் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதும், அவர்களை தவறாக படமெடுத்து அதை மற்றவர்களுக்கு இணையத்தின் மூலம் பகிர்வதும் சட்டப்படி குற்றம். எனவே தேசிய அளவில் காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் கண்காணிப்பு மையம் மூலமாக இதுபோன்ற குற்றங்கள் செய்யும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். எனவே இந்த அமைப்பு செல்போன் மற்றும் கணினியிலுள்ள ஐபி அட்ரஸ் மூலம் அதை பயன்படுத்தும் நபரின் விவரங்கள் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal