கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற இமாலய வெற்றி.! கூட்டணி மறைமுக அழைப்பு விடுத்த மம்தா பேனர்ஜி.!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளித்துள்ளார் மம்தா பேனர்ஜி.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் பெற்ற வெற்றியானது நாடு முழுவதும் உள்ள பிரதான கட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது என்றே கூறலாம். மேலும் , இந்த வெற்றியானது 2024 நாடாளுமன்ற தேர்தலை புது தெம்போடு எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தனது அரசியல் நிலைபாட்டை குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு :

மம்தா பானர்ஜி, நபன்னாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் பேசுகையில், 2024 இல் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்தியக் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்கைப் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். மாநில கட்சிகள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜகவால் போராட முடியாது என கர்நாடகா தீர்ப்பு வந்துள்ளது என்றும், இது பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி விமர்சனம் :

நாட்டில், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஜனநாயக உரிமைகள் அளிக்கப்படுகின்றன. மல்யுத்த வீரர்களைக் கூட இந்த அரசு விட்டுவைக்கவில்லை. என மம்தா பானர்ஜி பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

காங்கிரஸ் கூட்டணி :

இந்தச் சூழ்நிலையில், மாநில கட்சிகள் அவரவர்கள் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். மேற்கு வங்கத்தில் நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) போராட வேண்டும், டெல்லியில், ஆம் ஆத்மி போராட வேண்டும். பீகாரில் நிதிஷ்குமார் – தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறார்கள். அங்கு அவர்கள் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் தி.மு.க.வும் காங்கிரஸும் ஒன்றாக போராடுகிறார். ஜார்கண்டிலும், காங்கிரஸ், மாநில கட்சியான ஜேஎம்எம் உடன் ஒன்றாக இருக்கிறார்கள், மற்ற மாநிலங்களிலும் கூட கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்கள். எனவே அது அந்தந்த கட்சிகளின் விருப்பம். என பேசினார்.

மாநில கட்சிக்கு முன்னுரிமை :

மேலும், மாநில கட்சிகள் தங்கள் சொந்த மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்பது போல, காங்கிரஸ் தனது சொந்த இடங்களை வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும். உ.பி., பீகார், ஒடிசா, வங்காளம், ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா என மாநில கட்சிகள் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் இருந்தாலும் வலுவான கட்சிக்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களின் 200க்கும் மேற்பட்ட இடங்களை அவர்கள் கணக்கிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராடட்டும், நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் வியூகம் குறித்தும் , காங்கிரஸ் கட்சியுடனான தங்கள் நிலைப்பாடு குறித்தும் பேசினார் மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

மறைமுக அழைப்பு :

கர்நாடகா காங்கிரசுக்கு நான் ஆதரவளிக்கிறேன், ஆனால் நீங்கள் (காங்கிரஸ்) மேற்கு வங்கத்தில் எங்களுக்கு (திரிணாமுல் காங்கிரஸ்) எதிராக போராடுகிறீர்கள். அது உங்கள் கொள்கையாக இருக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாவது நல்லது வேண்டுமானால் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை மறைமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார் மம்தா பேனர்ஜி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.