ஈஷாவில் பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

ஈஷாவில் பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும்

கோவையில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம் தேதி மிக பிரமாண்டமாகவும் விமர்சையாகயும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும்.

“சிவனின் அருள் நிறைந்த இரவு” என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம் தேதி மாலை 6 மணி முதல் பிப்ரவரி 22-ம் தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

தன்னை உணர்ந்த ஞானியும் யோகியுமான சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்க உள்ளனர். 

தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனாவுடன் விழா தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைச்சாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. 

மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

 

author avatar
Castro Murugan