மகாராஷ்டிரா: ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த MPSC- தேர்வுகள் ஒத்திவைப்பு…!

மகாராஷ்டிராவில், ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த 2021-ம் ஆண்டிற்க்கான ‘மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(MPSC) தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள “மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC)” தேர்வுகள் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தக்காரேயுடன்,MPSC தேர்வாணைய நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்தியது, அதைத் தொடர்ந்து MPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.

COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேர்வின் தேதியை சில நாட்களுக்கு தள்ளிவைக்குமாறு மாணவர்கள் இதற்கு முன்பு கேட்டுக்கொண்டதனால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக MPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021 ஏப்ரல் 23 முதல் மே இறுதி வரை கால அட்டவணையின்படி நடைபெறும் என்றும், மேலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படமாட்டாது,என்றும் மகாராஷ்டிரா கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் கொரோனாவால் மாநிலத்தின் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.